Published : 05 Oct 2023 04:30 AM
Last Updated : 05 Oct 2023 04:30 AM

குழந்தைகளுக்கு பட்டாம்பூச்சிகளை கொண்டு இயற்கையை சொல்லி கொடுக்கலாம்

மதுரை: ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலத்தில் பட்டாம்பூச்சிகளை அதிகளவு பார்க்கலாம். இந்த சீசனில் மழை பெய்து, இலைதழைகள் வரும். இவை, பட்டாம்பூச்சிகளுக்கு உணவாக அமைகிறது. பட்டாம்பூச்சிகளின் வரத்தும், அதன் பெருக்கமும் அதிகமாக இருந்தால் அந்த இடம் மக்கள் வாழதகுந்த வளமான இடமாக இருப்பதாகவும், சுற்றுச்சூழல் மாசு அடையாத இடமாகவும் கருதப்படுகிறது.

பட்டாம்பூச்சிகளைப் பற்றி கடந்த2009-ம் ஆண்டு முதல் மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறைபேராசிரியர் ஜாய் ஷர்மிளா ஆய்வு செய்து வருகிறார். அழகர்கோவிலில் உள்ள அழகர் மலையில் பல்கலைக் கழக மானிய குழு ஒதுக்கிய ரூ.2 லட்சத்தில் பட்டாம்பூச்சிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதில், 101 வகை பட்டாம்பூச்சிகள் அங்கு இருப்பதை கண்டறிந்தார்.

அதில் முக்கியமானது ‘சதன்பேர்டு விங்’ பட்டாம்பூச்சி. ஒரு பறவையின் றெக்கை அளவிற்கு இது இருக்கும். பொன்னழகி என்றும் இந்தபட்டாம்பூச்சியை தமிழில் சொல்வார்கள். இந்த வகை பட்டாம்பூச்சிகள், மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே இருக்கும் என அதுவரை கூறப்பட்டு வந்தது.

ஆனால், கிழக்கு தொடர்ச்சி மலையில் இருப்பதை இவர் முதன் முதலில் கண்டறிந்தார். இவர் தனது ஆய்வை ‘பட்டர்பிளைஸ் ஆப் அழகர் ஹில்ஸ்’ என்ற புத்தகமாக ஆவணப்படுத்தி வெளியிட்டதோடு, அடுத்த தலைமுறை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ‘டாக்குமெண்ட்ரி பிலிம்’ ஒன்றும் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கன் கல்லூரியில் பட்டாம்பூச்சி பூங்கா ஒன்றை அமைத்துள்ளனர். பல்வேறு வகை பட்டாம்பூச்சிகளை அந்த பூங்காவில் விட்டு இனப்பெருக்கம் செய்து தற்போது 40 வகை பட்டாம்பூச்சிகள் இந்த பூங்காவில் உள்ளன. இந்த பூங்காவில் பட்டாம்பூச்சிகள் சார்ந்து வாழக்கூடிய கருவேப்பிலை, வில்வம், பென்டாஸ், தொட்டாச்சினுங்கி, கட்டிப்போட்டால் குட்டிபோடும் செடிகள், லண்டானா, கிலுகிலுப்பை, துத்தி, தாத்தா பூ, மூங்கில்,போன்சே ஆலமரம்போன்ற 50 வகையான செடிகளை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பேராசிரியர் ஜாய்ஷர்மிளா கூறுகையில், ‘‘பட்டாம்பூச்சிகள் இல்லையென்றால், பறவைகளுக்கு உணவு கிடைக்காது. பறவைகள், பட்டாம்பூச்சிகளின் லார்வா கம்பளி புழுக்களையும், பெரிய பட்டாம்பூச்சிகளையும் (Adult butterfly) விரும்பிசாப்பிடுகின்றன.

பட்டாம்பூச்சிகளில் தாவிகள், அழகிகள், வெள்ளையன் கள், நீலன்கள், வரியன்கள் என 5விதமான குடும்பங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு பட்டாம்பூச்சிகளை கொண்டு இயற்கையை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம். பட்டாம்பூச்சிகளை கொண்டு ‘ஈக்கோ டூரிஸம்’ மேம்படுத்தலாம்.

பெங்களூருவில் பன்னார்கட்டாவில் பட்டாம்பூச்சிக்கென்றே ஒரு பூங்கா அமைத்துள்ளனர். அந்த பூங்காவிற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். குழந்தைகளை அதிகம் கவர்ந்த பூங்காவாக அது திகழ்கிறது. அதுபோல், தமிழகத்தில் திருச்சியில் பட்டாம்பூச்சி பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்கா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம். அதுபோல், மதுரை மாவட்டத்தில் அழகர் கோவிலில் பட்டாம்பூச்சிகள் அதிகம் உள்ளன. ஒரே இடத்தில் 200 முதல் 300 பட்டாம்பூச்சிகள் உள்ளன. அதனால், அழகர் மலையில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கலாம்.

பட்டாம்பூச்சிகள், வெயிலில் அமர்ந்து சூரிய குளியல் (sunbath) எடுத்து பறக்கின்றன. சூரிய குளியல் எடுக்கும்போது வெயிலில் உள்ள சக்தியை தன்னுடைய உடலில் எடுத்து பறக்க ஆரம்பிக்கும். அதற்கான சக்தி வெயிலில் கிடைக்கிறது. அதனால், இயற்பியல் விஞ்ஞானிகள், தற்போது பட்டாம் பூச்சிகளின் உடம்பில் உள்ள துகள்களை சோலார் பேனலாக பயன்படுத்தலாமா எனவும் ஆராய்ச்சி செய்கிறார்கள்’ என்றார்.

- தொடர்புக்கு: antonyselvaraj.y@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x