ஊட்டி தாவரவியல் பூங்காவில் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |
கோடை சீசனுக்காக ரூ.28 லட்சத்தில் தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா
ஊட்டி: கோடை சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா தயாராகி வரும் நிலையில், நிகழாண்டில் புதிதாக ரூ.28 லட்சம் செலவில் இசை நீரூற்று, நடை மேம் பாலம் அமைக்கப்படுகிறது.
சர்வதேச சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர, கோடைகாலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, தோட்டக்கலைத்துறை இணைந்து கோடை விழா நடத்தப்படும்.
ஊட்டி மலர்க் கண்காட்சி உலக பிரசித்திபெற்றது என்பதால் இதனைக் காண, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்தாண்டு பூங்கா முழுவதும் உள்ள பாத்திகளில் 275 ரகங்களில் சுமார் 10 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், சுற்றுலாப் பயணிகளை கவர, 35 ஆயிரம் தொட்டிகளிலும் மலர் செடி நடவு செய்யப்படுகிறது. மே மாதம் 128-வது மலர்க் கணக்காட்சி நடைபெற உள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இதற்கான ஆயத்த பணிகள் இப்போதே தொடங்கியுள்ளன.
மேலும், கோடை சீசன் போது ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். இம்முறை ரூ.8 லட்சம் செலவில் பூங்கா நடுவில் உள்ள குளத்தில் இசை நீரூற்று அமைக்கப்படுகிறது.
இப்பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது. இதேபோல், நிகழாண்டில் புதிதாக, ஜப்பான் பூங்கா அருகே உள்ள இரு குளங்களுக்கு இடையே ரூ.20 லட்சம் செலவில் நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
இதேபோல் பல்வேறு பூங்காக்களிலும் தோட்டக்கலைத் துறை சார்பில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
