Published : 21 Feb 2023 06:39 PM
Last Updated : 21 Feb 2023 06:39 PM

விமானங்களை வேடிக்கைப் பார்க்க திரளும் எளிய மக்கள் - ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ ஆக மாறும் மதுரை ஏர்போர்ட் ரிங் ரோடு

மதுரை; விமானங்கள் தரையிரங்குவதையும், மேலேறுவதையும் ஆச்சரியத்துடன் வேடிக்கைப் பார்க்க மதுரை விமானம் நிலையம் அருகே ஏர்போர்ட் ‘ரிங்’ ரோட்டில் எளிய மக்கள் ஏராளமானோர் தினமும் திரள்கிறாரர்கள். அதனால், தற்போது அப்பகுதி ‘ஏர்போர்ட் டூரிஸ்ட் ஸ்பாட்’ஆக மாறி வருகிறது.

மதுரை அருகே அவனியாபுரம் அருகே விமானநிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த கால் நூற்றாண்டாக இருந்து வருகிறது. மதுரையிலே விமான நிலையம் இருந்தாலும், இன்னும் மதுரையில் வசிக்கும், எளிய, நடுத்தர மக்களுக்கு விமானப்பயணம் எட்டாக்கனியாகவே உள்ளது.

பெரும் பணக்காரர்களும், வியாபார நிறுவ அதிபர்களும், அத்தியாவசிய விமானப் பயணம் தேவைப்படுவோர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள், இன்னும் வானில் செல்லும் விமானங்களை ஒரு வித ஏக்கத்துடனே பார்த்து வருகிறார்கள். பெரும்பான்மையான மக்கள் இன்னும் விமானங்களை அருகில் சென்று பார்த்தது கூட இல்லை. கடந்த காலங்களில் பள்ளி சுற்றுலாவில் மாணவர்களை, அந்தந்த பள்ளி நிர்வாகிகள், விமான நிலையங்களுக்கு அழைத்து விமானங்கள் தரையிரங்குவதையும், மேலெழும்புவதையும் காட்டுவார்கள். தற்போது பள்ளிகளில் பெரும் விமான நிலையங்களுக்கு மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவதில்லை.

அதனால், பள்ளிக் குழந்தைகள், எழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், மதுரை விமான நிலையத்தையொட்டி செல்லும்போது ஏர்போர்ட் ‘ரிங்’ ரோட்டில் செல்லும்போது விமானங்கள் தரையிரங்கும் காட்சியையும், மேலேழும்பி புறப்பட்டு செல்லும் காட்சியையும் நின்று வேடிக்கைப்பார்த்து செல்கிறார்கள். அதனால், விமானங்கள் தரையிரங்குவதையும் மேலேறுதையும் வேடிக்கை பார்க்க, மதுரை அருப்புகோட்டை சாலையில் எப்போதுமே மக்கள் கூட்டம் திரண்டு வருகிறார்கள்.

மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் விமான சேவை தொடங்கப்பட்டிருப்பதால் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டு நகரங்களுக்கும் தற்போது அதிகளவு விமானங்கள் இயங்க ஆரம்பித்துள்ளது. அதனால், விமானங்கள் அடிக்கடி தரையிரங்குவதையும், மேலெழும்பி புறப்படுவதையும் பார்க்கும் வாய்ப்பு ‘ரிங்’ ரோட்டில் செல்லும் வாகன ஒட்டிகளுக்கும், எளிய மக்களுக்கும் ஏற்படுகிறது. அவர்கள், விமானங்கள் வரும் நேரங்களில் விமான நிலையத்தையொட்டி செல்லும் சாலைகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு அதனை வேடிக்கைப் பார்க்கிறார்கள். எளிய மக்களுக்கு எல்லாமே ஆச்சரியம்தான்.

சிறுகடைகள் அதிகரிப்பு: மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விமானங்களை வேடிக்கைப் பார்க்க திரள்கிறார்கள். அதனால், தற்போது இவர்களை குறி வைத்து அப்பகுதியில் ஹோட்டல், டீ கடைகள் போன்ற சிறுசிறு கடைகள் வர ஆரம்பித்துவிட்டன. குழந்தைகளுடன் வேடிக்கைப்பார்க்க நிற்கும் பெற்றோர்கள், அவர்களிடம் விமானங்கள் நெருக்கமாக தங்கள் தலைக்கு மேல் செல்வதை காட்டி, தரையிறங்கும் விமானம் எங்கே செல்கிறது, எங்கிருந்து வருகிறது என்று தன் பிள்ளைகளுக்கு அத்தனை ஆசையோடு எடுத்துச் சொல்கிறார்கள். மேலும், செல்போன்களில் அதனை படம்பிடித்து மகிழ்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x