Published : 29 Dec 2022 04:13 AM
Last Updated : 29 Dec 2022 04:13 AM

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக டாப்சிலிப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி: இயற்கை சூழலில் புத்தாண்டை கொண்டாட விரும்பவர்களால் டாப்சிலிப்பில் உள்ள சுற்றுலா பயணிகளின் தங்கும் விடுதிகளின் முன்பதிவு 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உலாந்தி வனச்சரகத்தில் அமைந்துள்ளது டாப்சிலிப் சுற்றுலா தலம். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு நிலவும் குளிரான காலநிலை, உயர்ந்து வளர்ந்த மரங்களின் கிளைகளை போர்த்தி உள்ள பனிப்படலத்தை ஊடுருவி வரும் சூரியனின் ஒளிக்கற்றைகளின் வெப்பத்தால், விழித்தெழும் பறவைகளின் ரீங்கார ஒலி ஆகியவற்றை கண்டுகளிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்குள் டிரெக்கிங் அழைத்துச் செல்வது மற்றும் கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு சூழல் சுற்றுலா அழைத்து செல்கின்றனர். இங்குள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமினை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோழிகமுத்தி யானைகள் முகாமில் வளர்க்கப்படும் யானைகளுக்கு காலை மற்றும் மாலையில் உணவு வழங்கும் நேரங்களில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது வழக்கம்.

யானை பாகன்கள் தங்கள் யானைகளுக்கு உணவு ஊட்டி விடுவதை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு களிப்பர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக இங்கு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. புத்தாண்டை இயற்கையுடன் கொண்டாட விரும்பும் பலரும் இங்குள்ள தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், புத்தாண்டுக்கு சில நாட்களுக்கே முன்பு தங்கும் விடுதிகளில் முன்பதிவு 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

யானை சவாரி: கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாமில் வனத்துறையால் 24 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. கோழிகமுத்தி யானைகள் முகாமில் நன்கு உடல்வாகு கொண்ட ஆண் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கும்கியாகவும், சில ஆண் மற்றும் பெண் யானைகள் சுற்றுலா பயணிகள் சவாரிக்கும், வனப்பகுதி மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

யானை மீது அமர்ந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சில நேரங்களில் வனப்பகுதியில் மேய்சலில் உள்ள மான்கள், காட்டு மாடுகள் ஆகியவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்புடன் டாப்சிலிப்புக்கு வருகின்றனர். கரோனா கட்டுபாட்டுக்கு பின்னர் யானை சவாரி நடைபெறவில்லை. புத்தாண்டு முதல் மீண்டும் யானை சவாரி தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x