Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

சரவெடி தயாரிக்க தடை - சிவகாசி அருகே பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் :

சரவெடி தயாரிக்க தடை உட்பட பட்டாசு தொழிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சிவகாசி அருகே பட்டாசு உற்பத்தியாளர்கள் நேற்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இத்தொழிலில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தயாரிப்பில் பேரியம் பயன்படுத்தக் கூடாது, சரவெடிகள் தயாரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனால், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப் பின்னர் உற்பத்தியைத் தொடங்க வேண்டிய நிலையில், நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஆலைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், பெரும்பாலானவை மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள். இங்கு சரவெடிகள் தயாரிப்பே முக்கியமானது.

ஆனால், சரவெடி தயாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஆலைகளை திறக்க முடியாமலும், உற்பத்தியை மேற்கொள்ள முடியாததாலும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

இது குறித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் காத்தலிங்கம் கூறியதாவது:

சரவெடி தயாரிக்கக் கூடாது, பேரியம் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

இதனால் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ள முடியாததால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x