Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM
‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் பொள்ளாச்சி அருகே மாணவர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர் 10 முத்தூர் குப்பையன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் குப்புசாமி(54), விவசாயி. இவருடைய மனைவி வளர்மதி (44). இவர்களுக்கு கீர்த்தி வாசன்(21), தினேஷ்(17) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். கீர்த்திவாசன் 3 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வை எழுதி உள்ளார். இருப்பினும் அவர் தேர்ச்சி பெறவில்லை.
இந்நிலையில் 4-வது முறையாக தற்போது தேர்வுஎழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், இம்முறை தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததால் தேர்ச்சி பெறுவோமோ என்ற அச்சம் கீர்த்திவாசனுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பெற்றோர் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே கீர்த்திவாசன் உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT