Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

வாணியம்பாடி கொலை சம்பவம் - அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் : எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல்வர் பதில்

வாணியம்பாடியில் நடைபெற்ற கொலை போன்ற சம்பவங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடியில் நடைபெற்ற கொலை மற்றும் நீட் தேர்வால் சேலம் மாணவர் தற்கொலை சம்பவத்தை காரணம் காட்டி, நேற்று அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

பேரவை அலுவல் நேரம் தொடங்கியதும் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசும்போது, ‘‘சமூக ஆர்வலர் வாசிம் அக்ரம் வாணியம்பாடி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி அவர் தொழுகை முடித்து வரும்போது கூலிப்படையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு அரசு, தனிப்படைகள் அமைத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளது. இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாசிம் அக்ரம் குடும்பத்துக்கு தேவையான நிதி வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை உருவாக்கித் தரவேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த ஜூலை 26-ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரில் இம்தியாஸுக்கு சொந்தமான கிடங்கில்கஞ்சா இருப்பதாக கிடைத்ததகவலின் பேரில் காவல் துறையினர் சோதனை நடத்தி, 9 கிலோ கஞ்சா, 10 கைபேசிகள், 3 கத்திகள் ஆகியவற்றை கைப்பற்றி, பைசல் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.

கஞ்சா குறித்த தகவலை வாசிம்அக்ரம்தான் காவல் துறையினருக்கு கூறியதாக இம்தியாஸ் கருதியுள்ளார். இந்நிலையில், கடந்த செப்.10-ம் தேதி மாலை 6.30 மணிக்கு அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதால், அதே இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் வண்டலூரை சேர்ந்த பிரசாத், மண்ணிவாக்கத்தை சேர்ந்த டெல்லிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாணியம்பாடி பகுதியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற, சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு ஒடுக்கும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x