Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM
சூரிய ஒளி மின்சார உற்பத்தி சாதனங்களையும், மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசு கட்டிடங்களில் அமைப்பது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு 3 நாள் பயணமாக நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவர் ஜிப்மரில் நடைபெற்ற விழாவில் ரூ.7.67 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சூரியஒளி மின் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
சூரிய மின் உற்பத்தி கூரை அமைக்க ஜிப்மர் வளாகத்தில் உள்ள 15 மருத்துவமனை, விடுதி கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மின் ஆலை ஜிப்மரின் 15 சதவீத மின் தேவையை பூர்த்தி செய்யும். இதன்மூலம் 1.5 மெகாவாட் மின்சாரம் சூரியஒளியில் இருந்து உற்பத்தி செய்யப்படும்.
புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி பயன்படுத்துதலில் இந்தியா முன்னேற்றத்தில் உள்ளது. சூரியஒளி மின்சாரம் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்தது. சூரியஒளி மின்சாரம் உற்பத்தி சாதனங்களையும், மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசு கட்டிடங்களில் அமைப்பது கண்டிப்பான தேவையாகவுள்ளது. சூரியஒளி மின்சாதனங்கள் அமைக்க முதலில் நிதி தேவைப்பட்டாலும், அது நீண்டகாலம் பயன்தரும். அரசு மானியமும் தருகிறது. மின்கட்டணம் செலுத்தும் தேவை இருக்காது.
கரோனா காலத்தில் பல படிப்பினைகள் கிடைத்துள்ளன. அதில் முக்கியமானது இயற்கையாக காற்று வந்து செல்லும் வகையிலும், சூரிய ஒளி உள்ளே வருவது போலவும் புதிய கட்டிடங்கள் கட்டமைப்பு அவசியமாகிறது. ஏனெனில் காற்றுக்கும், சூரிய ஒளிக்கும் இயற்கையாகவே நோயை குணப்படுத்தும் தன்மையுள்ளது. புதிய கட்டிடங்களில் இதை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சூரியஒளி சாதனங்கள் அமைக்கப்பட்டது குறித்து விசாரித்தபோது, “ஜிப்மருக்கு ஆண்டுக்கு ரூ.1.7 கோடி மிச்சமாகும். மின் ஆலைக்கான செலவு 5 ஆண்டுகளில் ஈடு செய்யப்படும். மின் ஆலையில் 25 ஆண்டுகளில் முதலீட்டு மதிப்பில் குறைந்தபட்ச வருமானம் ரூ.40 கோடியாக இருக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT