Published : 18 Aug 2021 03:13 AM
Last Updated : 18 Aug 2021 03:13 AM

அதிமுக உறுப்பினர் முகமது ஜான் மறைவால் காலியான - ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்துக்கு செப்.13-ல் தேர்தல் : ஆகஸ்ட் 24-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை

அதிமுக எம்.பி.யான முகமது ஜான் மறைவால் காலியான மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு செப்டம்பர்13-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றுஇந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2019 ஜூலையில் அதிமுகசார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமதுஜான், உடல்நலக் குறைவால் கடந்த மார்ச் 23-ம் தேதி காலமானார். இதனால் அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது.

அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர், சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று எம்எல்ஏக்களாக பதவியேற்றதால் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமாசெய்தனர். இதனால் தமிழகத்தில்3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியானது.

மாநிலங்களவை தேர்தல் விதிகளின்படி, உறுப்பினர் மறைவு, ராஜினாமா செய்வதால் ஏற்படும் காலியிடங்களுக்கு தனித்தனியாக தேர்தல்நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்று, 3 இடங்கள் காலியாக உள்ள நிலையில் முகமதுஜான் மறைவால் ஏற்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு மட்டும் வரும் செப்டம்பர் 13-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்தல் அறிவிக்கைவரும் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கும். ஆகஸ்ட் 31 வரைவேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்.

செப்டம்பர் 13-ம் தேதி காலை 9முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன், உதவி தேர்தல் அதிகாரியாக பேரவைகூடுதல் செயலர் செயல்படுவார்கள்.

உரிய ஆவணங்களுடன் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆகஸ்ட் 24 முதல் 31-ம் தேதி வரை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுகவுக்கு வாய்ப்பு உறுதி

ஓரிடத்துக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதால் அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட ஆளும் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு உறுதியாகியுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறுபவர் வரும் 2025ஜூலை 24-ம் தேதி வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்க முடியும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன், என்.சுரேஷ்ராஜன், திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளி்ட்டோர் பெயர்களை திமுக மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x