Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM
அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்துவது கண்டிக்கத்தக்கது என்று அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திமுக அரசு பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் சாதாரண கட்டணநகரப் பேருந்துகளில் பணிபுரியும் பெண்கள் கட்டணமின்றி பயணிப்பதற்கான அறிவிப்பு முதல்வரால் வெளியிடப்பட்டது. அதன்படி, நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணித்து வருகின்றனர். ஆனால், சில பகுதிகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடு செய்யஆண்களிடம் குறைந்தபட்ச கட்டண மாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் பேருந்து களில் மகளிர் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ஆண்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-க்கு பதில், ரூ.10 வசூலிக்கப்படுகிறது. திருவள்ளூரில் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு மற்றும் பெரும்புதூர் வழித்தடங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்கிறது.
மகளிருக்கு இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பைஈடு செய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் யுக்தி அரசாணைக்கு எதிரானது. இது அரசுக்கு,ஆட்சியாளர்களுக்கு தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே, இதில் முதல்வர் உடனடியாக தலையிட்டு மகளிருக்கான இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பு ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT