Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM
சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீ்திமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சொகுசு காருக்கு செலுத்த வேண்டிய நுழைவு வரியை விஜய் 2 வாரங்களில் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரைஇறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நாடியபோது அதற்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, அந்த காருக்கு இறக்குமதிக்கான சுங்கத் தீர்வை செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி செலுத்த தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை கடந்த ஜூலை 13-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இதுதொடர்பாக நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்தும், சொகுசு காருக்கான நுழைவு வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அத்துடன், ‘நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கு முன்மாதிரியாக குறித்த நேரத்தில் வரிசெலுத்தி உண்மையான ஹீரோக்களாக திகழ வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது’ என்று தெரிவித்த நீதிபதி, விஜய்க்கு ரூ.1 லட்சம்அபராதம் விதித்தும், அதை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தார்.
விஜய் மேல்முறையீடு
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா ஆகியோர்அடங்கிய அமர்வில் நேற்றுவிசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டதாவது:
ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்டோர் இதுபோல நுழைவு வரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருப்பதால்தான் மனுதாரரும் நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம். மனுதாரரும் இந்த நாட்டின் குடிமகன்தான். அவருக்கும் எல்லா சட்ட திட்டங்களும் பொருந்தும்.
நுழைவு வரியை எதிர்த்த எந்தவழக்கிலும், எந்த நீதிபதிகளும் இதுபோல விமர்சனம் செய்து தீர்ப்பளிக்கவில்லை. தனி நீதிபதியின் தீர்ப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மனுதாரர் மீது மட்டும் நீதிபதி தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்திருப்பது ஏற்புடையது அல்ல.
மனுதாரரை வரி செலுத்த மறுக்கும் தேச விரோதி போல தனி நீதிபதி முத்திரை குத்தியுள்ளார். மேலும், தேவையின்றி ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளார். நுழைவு வரிக்காக வணிகவரித் துறையினர் எவ்வளவு தொகையை செலுத்த வேண்டும் என கூறுகிறார்களோ, அதை ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் செலுத்த தயாராக இருக்கிறோம். இந்த விவகாரத்தை நீட்டித்துக்கொண்டே செல்லவிரும்பவில்லை. எனவே, தனி நீதிபதியின் தீர்ப்பில் உள்ள தேவையற்ற விமர்சனங்களை நீக்கி, அதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
எஞ்சிய தொகை போதும்
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், ‘‘நுழைவு வரியாக விஜய் செலுத்த வேண்டிய தொகையை வணிகவரித் துறை அதிகாரிகள் ஒரு வாரத்தில் கணக்கிட்டு அவருக்கு தெரிவிக்க வேண்டும். அந்த தொகையை அவர் அதற்கு அடுத்த வாரத்தில் செலுத்த வேண்டும்’’ என்றும்உத்தரவிட்டுள்ளனர்.
விஜய் தொடர்ந்துள்ள இந்தமேல்முறையீட்டு வழக்கில், வணிக வரித்துறை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT