Published : 25 Jun 2021 03:12 AM
Last Updated : 25 Jun 2021 03:12 AM

நாகை அரசு மருத்துவமனையில் - ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் தனியார் வங்கி அதிகாரி மூச்சு திணறி உயிரிழப்பு : மாவட்ட ஆட்சியர் விசாரணை

நாகை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால், அங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி அதிகாரி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

நாகை மாவட்டம், நாகூர் சிவன் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் ராஜேஷ்(36). தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 11 நாட்களாக நாகைமாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு துணையாக அவரது மனைவி சுபாவும் இருந்தார்.

இந்நிலையில், குழாய் வழியாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர் உட்பட 16 பேருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் நோயாளிகளுக்கு தனித்தனியாக சுவாசம் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். ராஜேஷ் கடைசி படுக்கையில் இருந்ததால், ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் கொடுப்பதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுபா கதறி அழுதார். அப்போது, தனது கணவர் இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன், வீடியோ காலில் தனது குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தார் எனவும், ஆக்சிஜன் துண்டிக்கப்பட்டதால்தான் தனது கணவர் இறந்தார் எனவும், இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்கள் கூறும்போது, ‘‘ஆக்சிஜன் சப்ளை செய்யும் இயந்திரத்தில் ஆக்சிஜன் அளவு கூடுதலாக இருந்ததால், அதிக அழுத்தம் காரணமாக குழாயில் வெடிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் கசியத் தொடங்கியது. இதனால், தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததால், உடனடியாக ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திவிட்டோம். அதன் பின்பு, சிலிண்டர் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுத்துக் கொண்டிருந்தோம். துரதிருஷ்டவசமாக ராஜேஷை மட்டும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது’’ என்றனர்.

தகவலறிந்த ஆட்சியர் அருண் தம்புராஜ் நேற்று மருத்துவமனைக்கு வந்து நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், நிலைய அலுவலர் மருத்துவர் உமா மகேஸ்வரன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் சப்ளையை நிறுத்தியதாக ஊழியர்கள் கூறுகிறார்கள். மற்ற நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், ராஜேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x