Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM

பாலியல் வன்கொடுமையால் இறந்த - புதுச்சேரி மாணவியின் தாய்க்கு பாதுகாப்பு தரக்கோரி போராட்டம் :

புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அருண்குமார் என்ற இளைஞருக்கு உரிய தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட மாணவியின் தாய்க்கு கொலை மிரட்டல் இருப்பதால் அக்குடும்பத்துக்கு, காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

பின்னர், எஸ்எஸ்பி அலுவலகத்தில் அவர்கள் வழங்கிய மனுவில், "இந்த விவகாரத்தில் மேட்டுப்பாளையம் போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை. குற்றவாளிகள் தற்போது வரை மாணவியின் பெற்றோரை மிரட்டி வருகின்றனர். இதற்கு பாஜக எம்எல்ஏ ஒருவர் பின்புலமாக செயல்படுகிறார்" என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

பாஜக எம்எல்ஏ மீது புகார்

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலர் ராஜாங்கம் புகார் மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், "கடந்த மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்த சம்பந்தப்பட்ட மாணவி பலவந்தமாக பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதை செல்போனில் படமாக்கி, குற்றவாளியால் மிரட்டப்பட்டு தொடர் துன்புறுத்தலுக்கு ஆளானார். உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்ட அந்த மாணவிதிருவனந்தபுரத்தில் உள்ள தனதுசகோதரி வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கு சிகிச்சையின்போது இந்த உண்மை கண்டறியப்பட்டது.

அங்கு மாணவியின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்தார். குற்றம்சாட்டப்பட்ட அருண்குமார் திருவனந்தபுரம் போலீஸாரால் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு காவலில் உள்ளார்.

இச்சூழலில் மாணவி இறந்ததால், ஜூன் 21-ம் தேதி அவரது உடலுடன் புதுச்சேரிக்கு வந்த அவரது தாயார் தாக்கப்பட்டார். தற்போதுவரை தொடர்ந்து மிரட்டப்படுகிறார். குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அத்தொகுதி பாஜக எம்எல்ஏவும், போலீஸாரும் ஆதரவாக செல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அருண்குமாரின் உறவினர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x