Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM
புதுச்சேரியில் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். இந்தப் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தேர்தலில் வென்று 50 நாட்களை கடந்த நிலையில் முதல்வராக ரங்கசாமியும், பேரவைத் தலைவராக செல்வமும் மட்டுமே பதவியேற்றுள்ளனர். இதுவரை அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. என்.ஆர்.காங். - பாஜக இடையே அமைச்சர்பதவிகளை பிரிப்பதில் மோதல் ஏற்பட்டு, சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை ராஜ் நிவாஸுக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார். இதையடுத்து இப்பட்டியலை துணைநிலை ஆளுநர், உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர், பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "அமைச்சர்கள் பட்டியலை வழங்கிஉள்ளேன். உள்துறை அமைச்சகத்தின் அனுமதி வந்தவுடன்பெயர் விவரம் வெளியாகும்" என்றார்.
அமைச்சர்கள் யார் யார்?
மத்திய உள்துறையில் உடனேஅனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதால், பவுர்ணமியான இன்றோ அல்லது வரும் 27-ம் தேதியோ பதவியேற்பு நடக்கும் என பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.பாஜக தரப்பில் நமசிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் லட்சுமி நாராயணன், லட்சுமிகாந்தன், திருமுருகன் ஆகியோர் பெயர்கள் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT