Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்கள் வேதனையை மட்டுமே அனுபவித்து வருகின்றனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 7 ஆண்டுகால ஆட்சியில் சாதனைகளைச் செய்ததாக ரூ.4,880 கோடி செலவில்விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வேலையில்லாத் திண்டாட்டம்
அதன்படி 7 ஆண்டுகளில் 14 கோடி பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. 2020-ம் ஆண்டில் மட்டும் 12 கோடி பேர் வேலையிழந்து வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துள்ளனர்.
இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம், கடந்த மே 26-ம்தேதி வெளியிட்ட அறிக்கையின்படி வேலையில்லாத் திண்டாட்டம் 11.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச ஒருநாள் ஊதியமான ரூ.375-ஐ பெறமுடியாமல் 23 கோடிமக்கள் கூடுதலாக வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 2020-21 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்துள்ளது. மேலும், நிதிப் பற்றாக்குறை 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, கடந்த 7 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடி வரை மத்திய அரசு வருவாய் ஈட்டியுள்ளது.
பணவீக்கம் 11.3 சதவீதமாக அதிகரித்து மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாஜக ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்தும் மக்களைப் பாதுகாக்க பிரதமர் மோடி தவறிவிட்டார். எனவே, 7 ஆண்டுகால மோடி ஆட்சியை வேதனையிலும் வேதனையான ஆட்சியாகவே நம் நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT