Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

கரோனா தொற்று சிகிச்சை முடிந்து - புதுச்சேரி திரும்பினார் முதல்வர் ரங்கசாமி :

கரோனா சிகிச்சை முடிந்து, புதுச்சேரிக்கு முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை திரும்பினார். எல்லையில் அவரது கார் முன்பு தேங்காய்களை உடைத்து, அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

புதுவை முதல்வராக ரங்கசாமி கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். அதையடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த 9-ம் தேதிகரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் தொற்று உறுதியானது.அன்றைய தினமே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ரங்கசாமி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து குணமடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து புதுவைக்கு நேற்று மதியம் புறப்பட்டார். புதுச்சேரி எல்லையில் சுங்கச்சாவடி அருகே காத்திருந்த ஆதரவாளர்கள், ரங்கசாமி கார் முன்பாக தேங்காய்களை உடைத்து வரவேற்றனர்.

இதையடுத்து அவர் நேராக தனது வீட்டுக்குச் சென்றார்.தெருவில் அவரது ஆதரவாளர்கள் வரிசையாக நின்று வரவேற்றனர். தனது வீட்டை ஒட்டியுள்ள, அவர்உருவாக்கியிருக்கும் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு சாமி கும்பிட்டார்.

பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள தனது வீட்டில் முதல்வர் ரங்கசாமி தனிமைப்படுத்திக்கொண்டார். குறைந்த பட்சம் ஒரு வாரம் தனிமையில் ஓய்வில்இருக்கும்படி அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரியின் புதிய அரசில் ரங்கசாமி மட்டுமே முதல்வராக பதவி ஏற்றுள்ளார். என்ஆர்.காங் - பாஜக கூட்டணியில் அமைச்சர்கள் யார்? என இன்னும் முடிவாகவில்லை. எம்எல்ஏக்களும் இதுவரை பதவியேற்கவில்லை. புதுவையில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. ஊரடங்கால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x