Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

புயல் தாக்கத்தால் - கன்னியாகுமரியில் சூறைக்காற்றுடன் கனமழை : வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; ஒரு லட்சம் வாழைகள் சேதம்

புயல் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் விளைநிலங்கள் மூழ்கின.

அரபிக் கடலில் உருவாகி அதிதீவிரமாக வலுப்பெற்று வரும் ‘டவ்தே’ புயலால் குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சிவலோகத்தில் (சிற்றாறு 2) 79 மி.மீ. மழை பெய்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 4,427 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு, பரளியாறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேங்காய்பட்டணம், மிடாலம், புத்தன்துறை, இனயம் புத்தன்துறை, பூத்துறை, முள்ளூர்துறை உட்பட கடற்கரை கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் கடல்நீர் புகும் ஆபத்து நிலவியது. அழகியபாண்டியபுரம், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், சிறமடம், கல்படி, சுங்காங்கடை, வில்லுக்குறி போன்ற பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சூறைக்காற்றில் முறிந்தன. ஆற்றங்கரையோரம் உள்ள ஏராளமான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

அருமனை அருகே சுவர் இடிந்துவிழுந்து யூஜின் என்ற இளைஞரும், ராமன்துறை மீனவ கிராமத்தில் பெட்மின் என்பவரது வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் அவரது 2 வயது குழந்தை ரெஜினாவும் உயிரிழந்தனர்.

மழையால் ஏற்பட்ட சேதங்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். உயிரிழந்த 2 பேரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். விஜய் வசந்த் எம்பி, ராஜேஷ்குமார் எம்எல்ஏ., மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், எஸ்பி நாத், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மழை நீடிக்கும்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

புயல் காரணமாக 17, 18, 20-ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x