Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில்ஆரவாரமும்.. ஆனந்தக் கண்ணீரும்! :

l தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, பதவியேற்பு விழாவில் பங்கேற்க காலை 9 மணிக்கு ஸ்டாலினும், அவரைத் தொடர்ந்து 9.05 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் வந்தனர். ஆளுநருக்கு ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

l வரவேற்புக்குப் பிறகு, அமைச்சரவை சகாக்களை ஒவ்வொருவராக ஆளுநருக்கு ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். குடும்பத்தினர் குறித்து ஆளுநர் விசாரித்ததும், மனைவி துர்கா, மகன், மகள், பேரக் குழந்தைகள் என அனைவரையும் அறிமுகப்படுத்தினார். பேரக் குழந்தைகளின் தலையில் கைவைத்து அவர்களை ஆளுநர் வாழ்த்தினார்.

l பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணத்தின் தொடக்கத்தில் ஆளுநர் புரோஹித், ‘‘ஐ எம்.கே.ஸ்டாலின்..’’ என்று ஆங்கிலத்தில் கூற, ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் தமிழகத்தின் முதலமைச்சராக..’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியபோது, அரங்கில் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதேநேரம், ஸ்டாலினின் மனைவி துர்கா உணர்ச்சி வசப்பட்டு, பெருகிய ஆனந்தக் கண்ணீரை கைகளால் துடைத்துக்கொண்டார்.

l ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் 33 பேரும், ‘உளமாற’ உறுதி கூறுவதாக பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

l பதவியேற்பு விழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் 700பேருக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. முதல் 2 வரிசைகள் இடைவெளி விட்டு அமைச்சர்களுக்காகவும், அடுத்த 3 வரிசைகள் கூட்டணி கட்சி தலைவர்கள், முதல்வர், அமைச்சர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு போடப்பட்டிருந்தன. ஆனால், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு இருக்கைகள் போதவில்லை. இதனால், ப.சிதம்பரம் கடைசி வரிசையில் உட்கார்ந்தார். அமைச்சர்கள் இருந்த பகுதிக்கு அருகில் கூடுதலாக இருக்கைகள் போடப்பட்டு காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல், ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் அமரவைக்கப்பட்டனர்.

l அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் பி.தனபால் ஆகியோருக்கு இடம் இல்லாத நிலையில், ஸ்டாலின் குடும்பத்தினர் இருந்த இடத்தில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் துர்கா ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் அங்கிருந்து வந்து அமைச்சர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு அருகில் புதிதாக போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர்.

l அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அருகில் அமர்ந்திருந்த தயாநிதி மாறனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

l விழாவில் முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மற்றும் குடும்பத்தினர், மு.க.தமிழரசு குடும்பத்தினர், சகோதரி செல்வி குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

l ஆளுநர் மாளிகையில் காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அழைப்பிதழ் பெற்றவர்கள் காலை 7 மணி முதலே வரத் தொடங்கினர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் வழங்கப்பட்டது. சாதாரண முகக் கவசம் அணிந்தவர்களுக்கு என்.95 முகக் கவசம் வழங்கப்பட்டது.

l முகக் கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழாவின்போது தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது.

l விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளாக இருந்த சிலர் பங்கேற்று அறிவுறுத்தல்களை வழங்கியதையும் காண முடிந்தது.

l பதவியேற்பு விழா முடிந்ததும், தேநீர் விருந்து வழங்கப்பட்டது. இதில், ஆளுநர் புரோஹித்துடன் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.தனபால், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x