Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM
கரோனா தொற்று காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திரைப்பட இயக்குநர் தாமிரா காலமானார். அவருக்கு வயது 53.
திருநெல்வேலியை சேர்ந்த தாமிராவின் இயற்பெயர் சேக் தாவூத். தாமிரபரணி ஆற்றின் மீது கொண்ட பற்றால் தனது பெயரை தாமிரா என மாற்றிக்கொண்டார்.
மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றினார். கடந்த 2010-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் ‘ரெட்டச் சுழி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாலசந்தர் ஆகிய இருவரையும் இணைந்து நடிக்க வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘ஆண் தேவதை' திரைப்படத்தை இயக்கினார். பின்னர் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வந்ததாமிராவுக்கு சில வாரங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை காலமானார்.
மறைந்த தாமிராவுக்கு பஷிரியா என்ற மனைவி, முகமது ராஷித், இர்ஷாத், ரிஷ்வான் ஆகிய மகன்கள், பவ்ஷியா என்ற மகள் உள்ளனர். தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT