Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
கரோனோ தொற்று பரவத் தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புதுச்சேரியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின் தொடக்கத்தில் மது பானக் கடைகள், மது பார்கள் மூடப்பட்டன. 2 மாதங்களுக்குப் பின்பு மே 24-ம் தேதி மீண்டும் மதுக் கடைகளைத் திறக்க அரசு அனுமதித்தது. அப்போது, மது பானங்களுக்கு கரோனா வரி விதிக்கப்பட்டது.
“இந்த வரி உயர்வின் மூலம் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மது தேவைக்காக புதுவைக்குள் வருவதை தடுக்கலாம்; கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் இது ஒரு அங்கம்” என அறிவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 31-ம் தேதி இந்த வரி உயர்வு தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்காக இந்நடைமுறை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் அனுமதியுடன், கலால் துறையில் இருந்து கரோனா சிறப்பு வரியை ரத்து செய்யும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். “ஏப்ரல் 7-ம் தேதி முதல் இந்நிலை நடைமுறைப்படுத்தப்படுகிறது” என புதுவை கலால் துறை துணை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கரோனா வரி குறைப்பால் தமிழகத்துக்கு இணையாக இருந்த மதுபானங்களின் விலை கடந்த 11 மாதங்களுக்குப் பின்பு குறைந்து பழைய நிலையை அடைந்திருக்கிறது.
அனைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், மதுபானக் கடைகள், வியாபாரிகள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT