Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் மரணம் : 2 பேர் பலத்த காயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்றுகாலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

சிவகாசி அருகே துரைசாமிபுரத்தில் ராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில், ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர். அப்போது மருந்து கலவை அறையைத் திறந்தபோது உராய்வு ஏற்பட்டு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்தில் அடுத்தடுத்து இருந்த 4 அறைகளும் இடிந்து சேதமடைந்தன.

இந்த விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முருகன், கந்தசாமி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாரனேரி போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த2 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆலை போர்மேன் முத்துராஜ், மேலாளர் கோமதிராஜ் ஆகியோர் மீது மாரனேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x