Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM
வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணிக்காக பள்ளிகளை திறந்து வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 88,947 வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் ‘வெப்காஸ்டிங்’ எனப்படும் நிகழ்நேர வாக்குப்பதிவு கண்காணிப்புக்கான கேமரா அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை செயலர், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நாளில் தமிழகத்தில் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் இணையவழி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளை வரும் 22, 23-ம் தேதிகளில் பார்வையிட உள்ளனர்.
பின்னர், மார்ச் 27 முதல்ஏப்ரல் 2-ம் தேதி வரை அந்தந்தவாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். பிறகு ஏப்ரல் 3, 4-ம்தேதிகளில் முதல்முறை சரிபார்ப்பு, 5-ம் தேதி இரண்டாம் முறை சரிபார்ப்பு பணிகள் நடக்க உள்ளன.
எனவே, வாக்குச்சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை மேற்கண்ட நாட்களில் திறந்து வைத்து, கேமரா பொருத்தும் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதியோருக்கு வாக்கு எங்கே?
அதேநேரம், சிறப்பு தபால் வாக்கு வசதி பெற்ற மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள்,கரோனாவால் பாதிக்கப்பட்டவர் கள் ஆகிய 3 வகையினருக்கு குரூப்-ஏ, குரூப்-பி அலுவலர்களின் அத்தாட்சி கையொப்பம் தேவையில்லை. அவர்களிடம் தபால் வாக்கு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற வரும் வாக்குப்பதிவு அலுவலர் கையொப்பமிட்டால் போதும்.
தபால் வாக்கு வசதி கோரியபிறகு வாக்காளர் மறைந்துவிட்டால், அவர்கள் பற்றிய தகவல்களை வாக்குச்சாவடி நிலைஅலுவலரிடம் தெரிவிக்கலாம் என்றும் தேர்தல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT