Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் - பணி நியமன முறைகேடு தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன? : அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்துஅறிக்கை தாக்கல் செய்யதமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் கடந்த 2016 முதல் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “மண்டல கணக்காளர் தேர்வில் வெற்றிபெற்ற 10 பேரின் தேர்ச்சியை ரத்து செய்ய அரசு செயலர் பரிந்துரை செய்துள்ள நிலையில், நெடுஞ்சாலைத் துறை இயக்குநர் 8 பேரின் தேர்ச்சியை மட்டுமே ரத்து செய்துள்ளார். டிஎன்பிஎஸ்சி முறைகேடு போல இதிலும் விடைத்தாள்களை மாற்றம்செய்து முறைகேடு நடந்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, இந்தமுறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்குவிசாரணை நடந்தது. அப்போது,குற்றச்சாட்டுக்கு ஆளான 10 விண்ணப்பதாரர்களின் தேர்ச்சி ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்துஅறிக்கை தாக்கல் செய்யுமாறுதமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 6 வார காலத்துக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x