Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது வாகனத்துடன் 28 கிலோ பறிமுதல்

நாகை அருகே ஆம்புலன்ஸில் பெட்ரோல் டேங்க் அருகில் தனி அறை அமைத்து 28 கிலோ கஞ்சா கடத்திய, சென்னையைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக வேதாரண்யத்துக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல இருப்பதாக நாகை க்யூ பிரிவு போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, க்யூ பிரிவு போலீஸார், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸை வழிமறித்து சோதனை செய்தனர். இதில், அந்த ஆம்புலன்ஸின் பெட்ரோல் டேங்க் அருகில் ஒரு தனி அறை அமைக்கப்பட்டு, அதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 28 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், உரிமையாளருமான சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார்(46), அயனாவரத்தைச் சேர்ந்த மகேந்திரன்(24), வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவிக்னேஷ் (26), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுந்தர்(36) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கஞ்சாவை யார் மூலமாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x