Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

ஜனவரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 11.43 லட்சம் பேருக்கு ரூ.1,117 கோடி நிவாரணம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு; மத்திய குழுவினர் நாளை ஆய்வு

ஜனவரியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 11.43 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.1,117 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நிவர், புரெவி புயல்களின்போது மனித உயிரிழப்பு, கால்நடை சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், புயல்கள் கரையைக் கடக்கும்போது வீசிய பலத்த காற்று, கனமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் மின்சாரம், சாலை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கட்டமைப்புகள் பெரும் சேதம் அடைந்தன. என் அறிவுரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு, நிவாரண நடவடிக்கைகளால், புயல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் உடனடியாக இயல்பு நிலை திரும்பியுள்ளது.

நிவர் புயல் சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.641.83 கோடி, நிரந்தரமாக சீரமைக்க ரூ.3,108.55 கோடி என ரூ.3,750.38 கோடியும், புரவி புயல் சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.485 கோடி, நிரந்தரமாக சீரமைக்க ரூ.1,029 கோடி என ரூ.1,514 கோடியும் தேவை என மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து புயல் பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்தது.

முன்னதாக, நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் தமிழக அரசு ரூ.80 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதவிர, நிவர், புரெவி புயல்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகள்படி வழங்க வேண்டியதைவிட கூடுதலாக நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், 2.69 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.598.05 கோடி நிவாரணமாக அறிவிக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.543.10 கோடி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஜனவரியில் 16-ம்தேதி வரை பெய்ய வேண்டிய இயல்பு அளவு மழையான 12.3 மி.மீ.விட அதிகமாக 136.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. உயிரிழப்பு, கால்நடை சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்ட போதிலும், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், உட்கட்டமைப்புகள் சேதமாகின.

இதையடுத்து, சேதங்களை தற்காலிகமாக சீரமைக்கவும், பாதிப்புக்கு நிவாரணம் வழங்கவும், ரூ.734.49 கோடி, நிரந்தரமாக சீரமைக்க ரூ.166.33 கோடி என மத்திய அரசிடம் ரூ.900.82 கோடி கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரியில் பெய்த கனமழை, மிக கனமழையால், 6.63 லட்சம் ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 18 ஆயிரம் ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் என மொத்தம் 6.81 லட்சம் ஹெக்டேர் பாதிப்புக்கு உள்ளானதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்க வேண்டியதைவிட நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. அதுபோலவே தற்போதும் பின்பற்றப்படுகிறது.

அதன்படி, மானாவாரி, நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்கள், பெறாத இதர பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

மானாவாரி நெற்பயிர் தவிரஅனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பல்லாண்டு கால பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

உச்ச வரம்பு நீக்கம்

2 ஹெக்டேர் அளவுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என்ற உச்சவரம்பை தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும்.

ஜனவரி மாத கனமழையால் பாதிக்கப்பட்ட 11.43 லட்சம் விவசாயிகளுக்கு, மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி ரூ.1,116.97 கோடி இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும். இந்த நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மத்திய குழுவினரும் வந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பிப்ரவரி 3, 4, 5-ம் தேதிகளில் பார்வையிட உள்ளனர்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x