Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

வேதா நிலையம் இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க தடை தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு

அரசு நினைவில்லமாக மாற்றப்பட்ட ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, கடந்த 27-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘வேதா நிலையம் நினைவு இல்லத்தின் திறப்பு விழாவை திட்டமிட்டபடி ஜன.28-ல் நடத்திக் கொள்ளலாம். ஆனால் பிரதான நுழைவுவாயில் கதவை மட்டும் திறந்து விழாவை நடத்தலாம்.

வேதா நிலையம் இல்லத்துக்குள் உள்ள பொருட்களை தீபா, தீபக் முன்னிலையில் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதால், எக்காரணம் கொண்டும் கட்டிடத்தின் கதவை திறக்கக்கூடாது. விழா முடிந்ததும் அதன் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல பொதுமக்களையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது’’ என உத்தரவிட்டு இருந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி, வேதா நிலையம் நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் திறந்துவைத்தார். அதேநேரத்தில், வேதா நிலையம் திறப்பு விழா தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையிலேயே அவர் வசித்த வேதா நிலையம் அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. வேதா நிலையத்தை கையகப்படுத்தி அரசுடமையாக்குவது தொடர்பாக ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரிடம் ஏற்கெனவே ஆட்சேபங்கள் பெறப்பட்டது. அதற்கான இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வேதா நிலையம் சாவியை அரசு வைத்திருப்பதால் மனுதாரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும், அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஏற்கெனவே அங்கிருந்த அசையும் சொத்துகள் சட்டப்படி கையகப்படுத்தப்பட்டு, மதிப்பிடப்பட்டு அதன்பிறகே இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அந்த அசையும் பொருட்கள் அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி தனது ஊகத்தின் அடிப்படையில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், வேதா நிலையம் இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்தனர். சாவியை அரசே வைத்துக்கொண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால், பொதுமக்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு தீபா, தீபக் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ள நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்.3-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x