Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு அமைச்சர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள் பங்கேற்பு

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னைகாமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தலைமைச் செயலக கட்டிடத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில், மகாத்மா காந்தி சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் வாசிக்க, துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அப்போது, ‘‘நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன். சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும்’’ என்று அனைவரும் உறுதியேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x