Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

வேல் ஏந்திய மு.க.ஸ்டாலினுக்குமுருகன் நீண்ட ஆயுளை தர வேண்டும் பழநியில் காவடி தூக்கிய பாஜக மாநில தலைவர் கருத்து

வேலை ஏந்திய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முருகன் நல்ல ஆயுளைக் கொடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.

பழநியில் தைப்பூச விழா நடந்து வருகிறது. விழாவில் வழிபாடு நடத்த பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் நேற்று மாலை பழநிக்கு வந்தார். அவருடன் பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி, மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வந்தனர்.

பழநி நகரின் மத்தியில் அமைந்துள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து 3 பேரும் காவடி எடுத்து பழநி அடிவாரம் பாதவிநாயகர் கோயில் வரை நடந்து வந்தனர். தொடர்ந்து மலைக்கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். பின்னர் எல். முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கந்தசஷ்டியை இழிவுபடுத்தியவர்களுக்கு வேல் யாத்திரை நடத்தி தகுந்த பாடம் புகட்டினோம். இந்துமதத்தை அவமதித்தவர்களை தை மாதத்தில் கிருத்திகை அன்றே வேல் தூக்க வைத்தவர் பழநி முருகன். எங்களின் கோரிக்கையை ஏற்று தைப்பூசத்துக்கு பொதுவிடுமுறை அளித்த முதல்வருக்கு நன்றி. கடவுளே இல்லை என்று சொன்ன ஸ்டாலின் இன்று இந்துக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்கிறார். ஸ்டாலின் தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக போலியாக வேலை துக்கியிருந்தாலும், அவருக்கு முருகன் நல்ல ஆயுளைத்தர வேண்டும்.

டெல்லியில் நடந்த கலவரம் திட்டமி்டப்பட்ட சதி. ஆரம்பம் முதலே போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x