Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

கரோனா வைரஸ் தடுப்பு விதிமுறையுடன் ஊரகத் திறனாய்வு தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வுதேர்வு நேற்று நடந்தது.கரோனா விதிமுறைகளுடன் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் (சென்னை மாவட்டம் நீங்கலாக) ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு (‘ட்ரஸ்ட்’) நடத்தப்படுகிறது. 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்துக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2020-21)ஊரக திறனாய்வு தேர்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நேற்று நடந்தது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம்பரிசோதிக்கப்பட்ட பிறகு தேர்வுமையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே அறிவுறுத்தியபடி அனைவரும் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு அறையில் 10 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்குமுடிவடைந்தது. தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இதற்கான உத்தேச விடை (கீ ஆன்சர்) ஓரிரு நாளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x