Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு அனுமதி மறுப்பதா? மத்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

மருத்துவப் படிப்புகளில் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மத்தியஅரசு அனுமதி மறுத்ததற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்மத்திய பாஜக அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆதரவுபோல ஒருபுறம் வேடம் போட்டு, இன்னொரு புறம், ஏதாவது ஒருவகையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழித்துவிட மத்திய அரசு துடிக்கிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போராடிப் பெற்ற 7.5 சதவீத இடஒதுக்கீட்டை சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மருத்துவப் படிப்புகளில் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமூக நீதிக்குஎதிரான இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் மத்திய பாஜக அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிமாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், “அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இடஒதுக்கீடு வழங்கினால் அது கல்வித் தரத்தைப் பாதிக்கும்’’ என்று மத்திய அரசு கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சமூகநீதிக் கோட்பாட்டை நீர்த்துப்போகச் செய்து, இடஒதுக்கீட்டு முறையையே ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் மத்திய பாஜக அரசின் நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது. புதுச்சேரி அரசின் தீர்மானப்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x