Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாகசேலம் நகர காவல் நிலையம் தேர்வு

சேலம்: தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக சேலம் நகர காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையத்தை தேர்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களை வரவேற்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, வழக்குகளை விரைந்து முடிப்பது உள்ளிட்ட காவல் நிலைய செயல்பாட்டு பணிகளை முன் வைத்து மதிப்பெண் அளித்து சிறந்த காவல் நிலையம் தேர்வு செய்யப்படும்.

கடந்த 2019-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையமாக சேலம் நகர காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சேலம் நகர காவல் நிலையத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு 5,558 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. வரும் 26-ம் தேதி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் முதல்வர் பழனிசாமி விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கிறார். தமிழகத்தில் சேலம் நகர காவல் நிலையம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ள தகவலை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் ‘வாக்கி -டாக்கி’ மூலம் அனைத்து காவல் அதிகாரிகளும் தெரிந்துகொள்ளும் வகையில் பேசி, மகிழ்ச்சியையும், பாராட்டுதலையும் தெரிவித்தார்.

சிறந்த காவல் நிலையமாக இடம் பிடிக்க காரணமாக இருந்த முன்னாள் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் தங்கதுரை, காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன், நகர காவல் ஆய்வாளராக இருந்த சிவக்குமார், முன்னாள் காவல் ஆணையர் சங்கர் ஆகியோருக்கு பாராட்டுதலை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x