Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM

தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழகத்தில் அடுத்த 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிச்சயம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் கிராமங்கள், வார்டுகளில் மக்கள் கிராம, வார்டு சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களின் தொகுதிகளில் நடந்தமக்கள் கிராம, வார்டு சபை கூட்டங்களில் ஸ்டாலின் கலந்துகொண்டு வருகிறார்.

அதன்படி, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரின் தொகுதியான சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் மக்கள் வார்டு சபைக் கூட்டம் நேற்று நடந்தது. சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா, வட சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி. சேகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

ராயபுரம் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் தங்களது கருத்துகள், கோரிக்கைகளை ஸ்டாலினிடம் முன்வைத்து பேசினர். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மக்களிடம் எடுத்துக் கூற கடந்த டிசம்பர் 23 முதல் மக்கள்கிராம, வார்டு சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதுவரை தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கிராம,வார்டு சபை கூட்டங்கள் நடந்துள்ளன.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த ஆண்டு உண்மையிலேயே வழி பிறக்கத்தான் போகிறது. இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி.

ராயபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார். ஜிஎஸ்டி கவுன்சிலின் தமிழக உறுப்பினராகவும் இருக்கிறார். காசிமேடு மீன்பிடி துறைமுக பிரச்சினை, வட சென்னையின் போக்குவரத்து நெரிசல், மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்று ராயபுரம் தொகுதி மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் அமைச்சர் ஜெயக்குமார் தீர்வு காணவில்லை. தமிழகத்துக்கான ஜிஎஸ்டி பங்குத் தொகையை பெறவும் அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.

மீனவர்களுக்கு வாக்கிடாக்கி வாங்கியதில் முறைகேடு, தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) முறைகேடு என்று அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகார்கள் குறித்து திமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x