Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

கோவையில் வார்ப்பட ஆலைகள் வேலைநிறுத்தம் தொடக்கம்

கோவை

மூலப் பொருட்களின் விலையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்தக் கோரி கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு வார்ப்படத் தொழிற்சாலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று முதல் தொடங்கியுள்ளன.

இந்த போராட்டத்தை ஆதரித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத்தின் (காட்மா) சார்பில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு வார்ப்படத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சிவசண்முககுமார் கூறியதாவது: 400 குறு, சிறு பவுண்ட்டரிகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வார்ப்படத் தொழிலுக்கு மூலப் பொருட்களான பிக் அயர்ன், ஸ்கிராப், கோக் மற்றும் சார்பு பொருட்கள் குறுகிய காலத்தில் 26 சதவீதத்துக்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளதால், வார்ப்படத் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இந்த விலை உயர்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

மூலப் பொருட்களை தயாரிக்க எந்தெந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பொருட்களின் விலையில் எந்த உயர்வும் இல்லை. ஆனால், இறுதியாக வெளியாகும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எனவே, விலை உயர்வைக் கண்காணிக்க ஒரு குழுவை அரசு ஏற்படுத்த வேண்டும். அதில், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்தால் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும். கோவை குறு மற்றும் சிறு வார்ப்படத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x