Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM
வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தவோ, என் சட்டப்படியான வாதங்களை தடுக்கவோ முடியாது என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, 2ஜி வழக்கு குறித்து என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதற்கு பதில் அளிக்கும்போது, ‘2ஜி வழக்கில் இருந்து நீதிமன்றம் என்னை விடுவித்துள்ளது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டவர்’ என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டினேன்.
இதற்காக, என் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153, 505-ன்கீழ் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில், தமிழக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால், ஜெயலலிதா மீதான சொத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கண்டன கருத்துகளை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, என் மீதான வழக்கை வரவேற்று, முதல்வருக்கும், காவல் துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என்றோ, என் சட்டப்படியான வாதங்களை தடுக்கலாம் என்றோ நினைத்தால் அது நடக்காது. என் மீது போடப்படும் வழக்கை பயன்படுத்தியே அதிமுகவின் ஊழல்களை வெளிப்படுத்தி அவர்களை சட்டத்தின் முன்புநிறுத்துவேன். ஊழல் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT