Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றார் ரஜினி கட்சி அறிவிப்புக்காக 29-ல் சென்னை திரும்புகிறார்

‘அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி நேற்று தனி விமா னத்தில் ஹைதராபாத் சென்றார்.

கடந்த 3-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிச.31-ல்அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தான் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதையடுத்து, ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நாளை மறுநாள் தொடங்க உள்ள‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து தனி விமானத்தில் நேற்று ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். கரோனா விதிமுறைகளுடன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. 40 சதவீத படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில் வரும் 29-ம் தேதி வரை தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

அதன்பிறகு, புதிய கட்சி அறிவிப்பு பணிக்காக ரஜினி சென்னை திரும்புகிறார். 2 நாட்களில் மீண்டும் ஹைதராபாத் சென்று, அடுத்தகட்ட படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இதைஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்காக படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கியுள்ளது.

ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு புறப்பட்டு செல்லும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்றுவெளியிட்டது. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‘‘ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு 20 முதல் 25 நாட்கள் நடக்கும். படப்பிடிப்புக்கு இடையே 29-ம்தேதி சென்னைக்கு வந்து செல்வேன். ஜன.10-க்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடைய வாய்ப்புள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x