Published : 05 Dec 2020 03:15 AM
Last Updated : 05 Dec 2020 03:15 AM
புரெவி புயல் வலுவிழந்துள்ள நிலையில் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையான கடல், கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக உள்வாங்கி வருகிறது. நேற்று 10 மீட்டர் தொலைவுக்கு கடல்உள்வாங்கியதால், பேரிடர் அச்சத்தால் கடற்கரை கிராமங்கள் அனைத்தும் நேற்று வெறிச்சோடின.
புரெவி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தென் மாவட்டங்களில் உச்சகட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புயல் வலுவிழந்த தகவல் கிடைத்த பின்னரும், மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதற்கான தடை நீடித்தது.
கடற்கரைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு மெரைன் போலீஸார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், போலீஸார் கண்காணித்தனர். விசைப்படகுகள், மற்றும் நாட்டுப்படகுகள் எதுவும் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி துறைமுக தங்கு தளங்களிலேயே படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. மீனவ கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
அமைதியான கடல்
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார், கீழவைப்பார், சிப்பிகுளம், பெரியசாமிபுரம், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், வள்ளவிளை, தூத்தூர், நீரோடி,ராஜாக்கமங்கலம், ராமன்துறை, அழிக்கால், பள்ளம் போன்ற கடலோர கிராமங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பேரிடர் மீட்பு குழுவினர், பொதுமக்களை வெளியே வரவேண்டாம் என எச்சரித்தனர்.
பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில், நீர்நிலைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை ஏதுமில்லை. இதனால், தாழ்வான பகுதிகளில் இருந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள், நேற்று தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். நேற்று இரவு 7 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது.
பேரிடர் மீட்புக் குழுவினரும், வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ள தீயணைப்பு மீட்புக் குழுவினரும் இன்னும் தென்மாவட்டங்களிலேயே முகாமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT