Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

‘புரெவி’ புயல் வலு குறைந்தாலும் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ள ‘புரெவி’ புயல், தூத்துக்குடி - ராமேசுவரம் இடையே கரையைக் கடப்பதால் தேனி, திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் சே.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘புரெவி’ புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 2-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி வரை இலங்கையின் கடலோரப் பகுதியில், திரிகோணமலைக்கு மிக அருகில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய புரெவி புயல், பாம்பன் பகுதியை நெருங்கிச் சென்று, பாம்பனுக்கு தென் மேற்கே 20 கி.மீ. தொலைவில் நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும். தூத்துக்குடி - ராமேசுவரம் இடையே 3-ம் தேதி இரவு முதல் 4-ம் தேதி அதிகாலைக்குள் கரையை கடக்கும்.

இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (டிச.4) இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 20 செ.மீ., காரைக்காலில் 16, நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, திருப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 15, நாகப்பட்டினத்தில் 14, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13, மயிலாடுதுறை, ராமேசுவரம் ஆகிய இடங்களில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

‘புரெவி’ புயல் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அதிகபட்சமாக 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும். மேலும், தெற்கு கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல்,லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

வட தமிழக கடலோர பகுதிகளில் 4-ம் தேதி இரவு 11:30 மணி வரை கடல் அலை 2 முதல் 4.3 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 4.5 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x