Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

ம.பி. முதல்வர் சவுகான் பங்கேற்கிறார் திருச்செந்தூரில் டிச.7-ல் வேல் யாத்திரை நிறைவு தமிழக பாஜக தலைவர் முருகன் தகவல்

திருச்செந்தூரில் வரும் 7-ம் தேதி நடக்க உள்ள வேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை கடந்த மாதம் 6-ம் தேதி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் தொடங்கியது. தொடர்ந்து மேற்கு, வடக்கு மாவட்டங்களில் வெற்றிவேல் யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் பல ஆயிரம் மக்கள் திரண்டு அமோக ஆதரவு அளித்தனர்.

இடையில் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாகவும், மீட்பு பணிகளில் பாஜக நிர்வாகிகள் ஈடுபட வேண்டி இருந்ததாலும், வெற்றிவேல் யாத்திரை நிறுத்தப்பட்டது. நிவாரணப் பணிகள் காரணமாக யாத்திரை ரத்து செய்யப்பட்ட அறுபடை வீடுகளான சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் கோயில்களில் டிச.5-ம் தேதி முருகனை தரிசிக்க இருக்கிறோம்.

தொடர்ந்து டிச.7-ம் தேதி வெற்றிவேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடக்க உள்ளது. இந்த விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், தமிழக பாஜக பொறுப்பாளரும், கட்சியின் தேசியப் பொதுச் செயலாளருமான சி.டி.ரவி, தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கஉள்ளனர். இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பெருந்திரளான எண்ணிக்கையில் குடும்பத்துடன் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x