Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

அரசியல் மாற்றத்துக்காகவே வேல் யாத்திரை வானதி சீனிவாசன் கருத்து

தமிழகத்தில் அரசியல் மாற்றம்ஏற்படவே வெற்றிவேல் யாத்திரை நடத்தப்படுகிறது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் கூறினார்.

அண்மையில் பாஜக தேசிய மகளிரணித் தலைவியாக நியமிக்கப்பட்ட அவர் டெல்லியில் பொறுப்பேற்றார். நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேசிய மகளிரணித் தலைவி என்ற கவுரவம் தென்னிந்தியாவில் முதல்முறையாக தமிழகத்துக்கு வழங்கப்பட்டுஉள்ளது. மத்திய அரசின் திட்டங்களை பெண்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்வதே எங்களது பிரதானப் பணியாகும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே வெற்றிவேல் யாத்திரையை மாநிலதலைவர் எல்.முருகன் நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைவதையே மாற்றமாக கருதுகிறோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கும்.

அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. இக்கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் கூட்டணியின் தலைமையாக அதிமுக இருக்கிறது.

வெற்றிவேல் யாத்திரை ஓர் அடையாள யாத்திரை. இந்துக்களை கொச்சைப்படுத்தும் நபர்களை அடையாளப்படுத்தவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. பாஜக யாரைப் பார்த்தும் பயப்படவில்லை. சட்டப்படி நடக்கும் யாத்திரையைத் தடுத்தால், அது மக்களிடையே எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றுதான் கூறினேன். அதிமுகவினர் அதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

இனி பாஜகவுக்கு தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது. முன்னேற்றம் மட்டும்தான் இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x