Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

புதுச்சேரி அரசு, அரசு சார் பள்ளிகளில் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி தொடக்கம்

புதுவையில் அரசு, அரசு சார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ராஜீவ்காந்தி பெயரில் காலையில் ரொட்டி- பால் திட்டமும், மதிய உணவு திட்டமும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ‘மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரில் புதிதாக காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்படும்’ என முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாமில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 81 ஆயிரம் மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி, சாம்பார், சட்னி ஆகியவை வழங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டம் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செம்மைப்படுத்த ரூ.6 கோடி கூடுதலாக செலவு செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின் தொடக்க விழா புதுச்சேரியில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி மு.கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் நாராயணசாமி, கல்வியமைச்சர் கமலக்கண்ணன் மாநில திமுக அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ (தெற்கு), சிவக்குமார் (வடக்கு), நாஜிம் (காரைக்கால்) மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழா நிறைவடைந்து, காலை 10 மணிக்கு மேல் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x