Published : 23 Mar 2024 08:39 AM
Last Updated : 23 Mar 2024 08:39 AM

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை/ராமேசுவரம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். மேலும், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்ய வேண்டும்.

மேலும், சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் வலியுறுத்தல்: இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடித்தில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது 5 படகுகளையும் விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைகைது செய்யக் கூடாது என இலங்கை கடற்படைக்கு உத்தரவிடுமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

19 மீனவர்கள் விடுதலை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து பத்மநாதன், செல்வராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கடந்த 10-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அகிலன், காளியப்பன், கோடிமாரி, ஷேக் அப்துல்லா, தங்கராஜ், ஜெயராமன், சரவணன் ஆகிய 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுதன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடலுக்குச் சென்ற கந்தசாமி, சுந்தரமூர்த்தி, காளிதாஸ், ராம், ஆனந்தபால், புலவேந்திரன், கவியரசன், சிங்காரம், மதன், அன்புராஜ், ராஜ்குமார், கிஷோர், நவீன். நவீன்குமார், செந்தில் ஆகிய 15 மீனவர்களும் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு நேற்றுஊர்க்காவல் துறை நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், 19 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலைசெய்தார். மேலும், 3 விசைப்படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா6 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

வரும் ஜூன் 7-ம் தேதி 3 படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு, வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x