Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM

புதுக்கோட்டை அருகே இளம் பெண் ஆணவக் கொலை? - சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு :

புதுக்கோட்டை அருகே மாற்று சாதி இளைஞரை காதலித்த மகளை பெற்றோர் ஆணவக் கொலை செய்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரிய மனுவுக்கு புதுக்கோட்டை எஸ்.பி. பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை பொன்னமராவதி மங்களிப்பட்டியைச் சேர்ந்த அழகப்பன் மகள் சிவஜோதி. இவரும், சிவகுருநாதனும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் சிவஜோதியை அவரது தந்தை கண்டித்தார்.

இந்நிலையில் சிவஜோதி ஜூலை 2-ல் மர்மமான முறையில் இறந்ததாகவும், அவரது உடலை குடும்பத்தினரே எரித்ததாகவும் தகவல் கிடைத்தது.

சிவஜோதி இறப்பு குறித்து போலீஸில் புகார் செய்யவில்லை. பிரேத பரிசோதனையும் நடத்தவில்லை. இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் செப். 25-ல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சிவஜோதி மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவரை அவரது குடும்பத்தினர் ஆணவக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.ரத்தினம் வாதிட்டார். பின்னர், மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலர், தமிழக டிஜிபி, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.30-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x