Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

ஈரோட்டில் மண்டல கூடைப்பந்து போட்டி கோவை அணி வெற்றி, சேலம் 2-வது இடம் :

ஈரோடு: ஈரோட்டில் நடந்த மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை மண்டல அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி, ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளி மைதானம் மற்றும் திண்டல் வேளாளர் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் பிரிவினருக்கான போட்டியில் கோவை அணி முதலிடமும், சேலம் அணி இரண்டாமிடமும், நாமக்கல் அணி மூன்றாமிடமும் பிடித்தன. இதேபோல், பெண்கள் அணியில் கோவை அணி முதலிடம், சேலம் அணி இரண்டாவது இடமும், ஈரோடு அணி மூன்றாவது இடம் பிடித்தது.

பரிசளிப்பு விழாவிற்கு, ஈரோடு கூடைப்பந்து சங்க தலைவரும், சுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாரதி வித்யா பவன் பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார். இப்போட்டியில் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள், மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர் என, மாவட்ட கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x