Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM

செல்பி எடுத்தபோது கடலில் மூழ்கிய 2 இளைஞர்களை 2-வது நாளாக தேடுதல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கப்பியறை ஓலவிளையை சேரந்தவர் ஜெபின்(25). சென்னையில் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலையில் ஜெபின், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயிலை சேர்ந்த கல்லூரி மாணவர் பாலாஜி (19), சுரேஷ் (28) ஆகியோர் கருங்கல் அருகே ஆலஞ்சி பாரியக்கல் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

கடற்கரையில் நின்று செல்போனில் செல்பி எடுத்த அவர்கள், ஆர்வக்கோளாறால் கடலுக்குள் இருந்த சிறிய பாறை பகுதிக்கு சென்று மீண்டும் செல்பி எடுத்தனர். அப்போது வேகமாக எழுந்த ராட்சத அலை அவர்களை இழுத்துச் சென்றது. சுரேஷ் மட்டும் போராடிக் கரை சேர்ந்தார். ஜெபின், பாலாஜி ஆகிய இருவரையும் காணவில்லை.

இதனால் கதறியவாறு சுரேஷ் அங்கு நின்றதை பார்த்த மீனவர்கள் கடற்கரையில் திரண்டனர். குளச்சல் மெரைன் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் ஜிபின், பாலாஜி இருவரையும் கடல்பாறை பகுதியில் நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. 2-வது நாளாக நேற்று காலை முதல் இருவரையும் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் பெரும் சோகத்தில் தவித்தவாறு கடற்கரை பகுதியில் நின்றிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x