Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியில் துன்புறுத்தல் செய்த இளைஞர் உள்ளிட்ட 4 பேர் நேற்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஐயன் பொம்மையாபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (36). இவர் கடந்த 14.12.2020 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது மாற்றுதிறனாளி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இது தொடர்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அய்யப்பனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர், பாரதி நகரைச்சேர்ந்த சுனைராஜ் மகன் மதன்குமார் (27), திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், குறிச்சி பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் சரவணன் (23) ஆகிய இருவரையும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தென்பாகம் காவல் நிலையம் மற்றும் முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். உடன்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த தாசன் மகன் ஜேக்கப் ராஜன் (55). தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக இவரை கடந்த 17.12.2020 அன்று ஆறுமுகநேரி போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு நேற்று எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவின் பேரில் அய்யப்பன், மதன்குமார், சரவணன், ஜேக்கப் ராஜன் ஆகிய 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x