Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

குமரி மாவட்டத்தில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம் :

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் வணிக வளாக கட்டிடத்தில் தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை வகித்தார். தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விற்பனையை தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை கோ ஆப்டெக்ஸ் நடைமுறைப்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை ஆகிய இடங்களில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கடந்த தீபாவளி காலத்தில் ரூ.2.51 கோடி விற்பனை நடைபெற்றது. இந்த தீபாவளிக்கு ரூ.6 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோ ஆப்டெக்ஸ் ‘கனவு நனவு திட்டம்’ என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 10 மாத சந்தா தொகையினை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று 11-வது மற்றும் 12-வது மாத சந்தா தொகையை கோ ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகள் 20 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

நிகழ்ச்சியில் கோ ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் முத்துக்குமார், குமரி மேலாளர் பத்மராஜ் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x