Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

நச்சுத்தொட்டியை சுத்தம் செய்ய மனித சக்தியை பயன்படுத்தக் கூடாது : கோவில்பட்டி நகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

நச்சுத்தொட்டியை சுத்தம் செய்ய மனித சக்தியை பயன்படுத்தக் கூடாது என்று கோவில்பட்டி நகராட்சி ஆணையர் அறிவுறுத்தி யுள்ளார்.

கோவில்பட்டி நகரப் பகுதிகளில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்தது.நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:

கட்டிட உரிமையாளர்கள் நச்சுத்தொட்டியை சுத்தம் செய்ய மனிதசக்தியை பயன்படுத்தக் கூடாது. செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் இயந்திரத்தின் மூலம் மட்டுமே நச்சுத் தொட்டிகளை சுத்தம் செய்யவேண்டும். இரவு நேரங்களில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய அனுமதி கிடையாது. கட்டிட உரிமையாளர்கள் உரிய பாதுகாப்புடன் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு.

செப்டிக் டேங்க் கழிவுநீரை சிதம்பராபுரத்தில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் உள்ள கசடுகழிவு மேலாண்மை தொட்டிகளில் மட்டுமே ஊற்ற வேண்டும். பொதுஇடங்களிலோ, சாலையோரங்களிலோ ஊற்றினால் பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

நகராட்சி இன்ஜினியர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், வள்ளிராஜ், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x