Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM
பொள்ளாச்சி: கிணத்துக்கடவு ஒன்றியம் மெட்டுவாவி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மெட்டுவாவி ஊராட்சி மன்ற தலைவராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துக்கருப்பண்ணசாமியின் மனைவி பூபதி உள்ளார். ஊராட்சி செயலராக லலிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலர் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து கிணத்துக்கடவு ஒன்றிய திமுக செயலாளர் கிரி கதிர்வேல் தலைமையில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னச்சாமி, வேலுமணி, அட்மா தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது,‘‘நிர்வாக சீர்கேடு காரணமாக ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலவச வீட்டு மனை பட்டா, 100 நாள் வேலை திட்டம், பசுமை வீடு கட்ட அனுமதி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT