Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

குழந்தைத் தொழிலாளர்கள் 10 பேர் மீட்பு :

கோவை

கோவை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு இடங்களில் பணியாற்றிய குழந்தைத் தொழிலாளர்கள் 10 பேர் மீட்கப்பட்டனர்.

கோவை மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப்பிரிவு அதிகாரிகள், தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய்த்துறை, காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன் அமைப்பினர் உள்ளிட்ட துறையினர் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் கிணத்துக்கடவு, அன்னூர், பொள்ளாச்சி தாலுகா, ஆனைமலை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மையங்கள், தொழிற்சாலைகள், நூற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக, குழந்தைத் தொழிலாளர் திட்டப்பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த ஆய்வில் பொள்ளாச்சி மற்றும் அன்னூர் நூற்பாலைகளில் இருந்து 14 வயதுக்கு கீழ் உள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள், அரசூர் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அதேபோல, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட 6 வளரிளம் பருவத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 10 பேரும் கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

உரிய சான்று இல்லாத 5 பேருக்கு வயதை உறுதி செய்ய, கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், சிறுவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறை மூலம் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x