Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வணிகவரி அலுவலர் கைது :

கோவை

கோவையில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வணிகவரி அலுவலரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘எனது நிறுவனத்தின் 2014-15-ம் ஆண்டறிக்கையில், தணிக்கையாளர் செய்த தவறு தொடர்பாக, வணிக வரித்துறையினர் ரூ.15.73 லட்சம் அபராதம் விதிக்க இருந்தனர். அபராதத் தொகை விதிக்காமல் இருக்க, தனக்கு ரூ.1 லட்சம் தொகை லஞ்சமாக தர வேண்டும் என, வணிகவரி அலுவலர் விவேகானந்தன் என்னிடம் கேட்டார். என் நிறுவனத்தில் எந்த தவறும் இல்லை. லஞ்சம் கேட்கும் வணிகவரி அலுவலர் விவேகானந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து, கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், ரசாயனம் தடவப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புகார்தாரரிடம் கொடுத்தனுப்பினர். அவரிடமிருந்து நேற்று விவேகானந்தன் தொகையை வாங்கியபோது, மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், விவேகானந்தனை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x